சிறையில் இருந்தவர்கள் விடுவிக்கப் பட்டுவிட
வெளியில் திரிந்தவர்கள் வீட்டுக்குள் முடங்கினார்கள்.
தாம் வாழ பிற உயிரை அழித்தவர்கள் மனம் மாறி
தாம் வாழ பிற உயிரை அழிப்பதையே
தவிர்க்கிறார்கள்.
வாகனத்தின் ஒலிகள் எல்லாம் காணாமல் மறைந்துவிட
பறவைகளின் ஒலிகள் மட்டும் பரவசத்தை அளிக்கிறது.
ஆரவாரப் பேய்களெல்லாம் அடங்கியே ஒதுங்கிவிட
அமைதி மட்டும் அடியெடுத்து அடியெடுத்து வருகிறது.
தூசுமண்டிப் போயிருந்த பசுமரத்து இலைகளெல்லாம்
மாசு அற்ற காற்றதனை மகிழ்ச்சியோடு தருகிறது.
கொதித்து நிற்கும் கதிரவனின் அனல் கரங்கள் தாக்கினாலும்
வீட்டுக்குள் அமர்வதனால் வித்தியாசம் தெரிகிறது.
இயற்கையை மறந்துவிட்டு செயற்கையோடு வாழ்ந்தவர்கள்
இயற்கையை நாடுவது அனைவருக்கும் புரிகிறது.
சுயநலம் தான் என்றாலும் பொதுநலனும் கலந்ததனால்
புதியதோர் மாற்றத்தின் விதை கண்ணில் தெரிகிறது.
இன்னும் எத்தனை நாள் இருக்கும் இந்த மாற்றம்
நல்லதாகத் தெரிந்தாலும் பயம் எட்டிப் பார்க்கிறது.
நல்லதை மட்டுமே மனம் வேண்டி நிற்கிறது
இன்னும் எத்தனை நாள்? இறையிடம் கேட்கிறது.
இன்னும் எத்தனை நாள் இறைவா!
எனக் கேட்கிறது.
*கிராத்தூரான்