சென்னை, தி.நகரில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமக்கு ஆதரவு தந்த மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு நன்றி. மேலும் மக்களுக்காக அயராது உழைத்தவர் ஜெயலலிதா என தீபா புகழாரம் சூட்டினார். தமிழ்நாடு, தமிழ் மக்களுக்காக இனி தொடர்ந்து பாடுபடுவேன் எனவும் ஜெ.தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடுவேன் என தீபா தெரிவித்தார். மக்கள் கருத்தை அறிந்த பின் அரசியலுக்கு வருவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
தீபா அரசியலில் குதிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஏராளமான பத்திரிகையாளர்கள் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். ஆனால் தீபாவோ, நான் முதல் முதலாக உரையாற்றப்போகிறேன் என கூறியபடி மைக்கை பிடித்து பத்திரிகையாளர்களுக்கு 'ஜெர்க்' ஏற்படுத்தினார். இதையடுத்து மேடையில் உரையாற்றுவதை போன்ற தோரணையுடன்தான் பேச்சை ஆரம்பித்தார். பேச்சின்போது, ஜெயலலிதாவை போன்றே சில இடங்களில் அழுத்தமாக சத்தமாக பேசினார். பிற இடங்களில் சாதாரணமாக பேசினார். குறிப்புகளை ஒரு காகிதத்தில் எழுதி அதை பார்த்துவாசித்தார். ஜெயலலிதாவை போலவே எம்ஜிஆரின் சினிமா பாடல் வரிகளையும் 'உரையின்போது' மேற்கோள் காட்டினார். "மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா, மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா" என பாடி ஏழை பங்காளனாக வாழ்ந்த மக்கள் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாளான இந்த நன்னாளில் என் வாழ்க்கையின் புது அத்தியாயத்தை தொடங்க உள்ளேன் என தீபா தெரிவித்தார். ஜெயலலிதா போலவே ஆடை மற்றும் அலங்காரமும் செய்திருந்தார் தீபா. நிருபர்களின் ஆங்கில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பதிலளித்தார் தீபா. அப்போது அவரது உச்சரிப்பு ஸ்டைல் பக்காவாக ஜெயலலிதாவை போன்றே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடுவேன் என தீபா தெரிவித்தார். மக்கள் கருத்தை அறிந்த பின் அரசியலுக்கு வருவேன் எனவும் அவர் தெரிவித்தார்.