t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2025

திருக்குறள்: 

குறள் 115: 

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி. 

விளக்க உரை: 

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

பழமொழி :
Success bows to the hardwork. 

கடின உழைப்புக்கு வெற்றி தலைவணங்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

நீ மதிக்கும் மனிதனை காண்பி. நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் தெரிந்து கொள்வேன் - தாமஸ் கார்லைல்

பொது அறிவு : 

01."குழந்தை கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்?


அழ. வள்ளியப்பா

02.பாலை பதப்படுத்தும் முறையை முதலில் கண்டுபிடித்தவர் யார்?


 லூயிஸ் பாஸ்டர்
 Louis Pasteur
English words :

torched - burned

breach - breaking a rule

தமிழ் இலக்கணம்: 

 முக்காற்புள்ளி (:) பயன்படுத்தப்படும் இடங்கள் 2:
விளக்கங்களைத் தொடங்குதல்: ஒரு தலைப்பு அல்லது பொதுவான கூற்றுக்குப் பிறகு விளக்கம் வரும்போது.
எ.கா.: நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை.

அறிவியல் களஞ்சியம் :

 வால் நட்சத்திரத்துக்கு வால் உள்ளது. சூரியனுக்கு அருகிலுள்ள புதன் கோளுக்கு வால் உள்ளது. 'கதிர்வீச்சு அழுத்தம்' காரணமாக சோடியம் அணுக்கள் வெளியே தள்ளப்பட்டு அதன் வளிமண்டலத்தை அகற்றி, அதற்கு நீண்ட ஒளிரும் வால் கிடைக்கிறது. அதுபோல பூமிக்கு வால் இருக்கிறதா என்றால் ஆம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால், விண்வெளியில் 20 லட்சம் கி.மீ., துாரத்துக்கு நீண்டுள்ளது. இது பூமியின் இருண்ட பக்கத்தில் இருப்பதால் இது தெரிவதில்லை. பூமியின் காந்தப்புலத்தை சூரிய காற்று சிதைப்பதால் இந்த வால் உருவாகிறது.

டிசம்பர் 19

கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நினைவுநாள்

கி. ஆ. பெ. விசுவநாதம் (10 நவம்பர் 1899 - 19 திசம்பர் 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, என அழைக்கப்படுபவர், தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 

2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது. 1997ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது
நீதிக்கதை

 மன உறுதி



ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். 



அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார்.



ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், விவேகானந்தரையும் விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.



அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது? என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும், சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். 



ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால் தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது, என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டுபயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

இன்றைய செய்திகள்

19.12.2025

⭐தமிழகத்தில் 1,439 பகுதிகளில் சட்டவிரோதக் கனிமத் திருட்டு கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கனிமவளக் கொள்ளை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

⭐பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

⭐இந்திய அணுசக்தித் துறையில் 100% தனியார் முதலீட்டை அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 'ஷாந்தி மசோதா' மக்களவையில் நிறைவேறியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டி: அரியானாவுக்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜார்க்கண்ட்
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Today's Headlines

⭐Illegal mineral theft has been detected, and cases have been registered in 1,439 areas in Tamil Nadu. The Madras High Court has ordered strict action against the mineral theft.

⭐ India is now the 4th largest economy, surpassing Japan. 

⭐The Shanthi Bill, which allows 100% private investment in India's nuclear energy sector, has been passed in the Lok Sabha

 SPORTS NEWS 

🏀Syed Mushtaq Ali Trophy Final: Jharkhand set a target of 263 runs for Haryana. The final of the Syed Mushtaq Ali Trophy is being held in Pune.


18 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.12.2025



திருக்குறள்: 

குறள் 112: 

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப் புடைத்து. 

விளக்க உரை: 

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்

பழமொழி :
The harder you work,the brighter you shine. 

அதிகம் உழைத்தால், அதிகமாக ஒளிர்வீர்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.____விவேகானந்தர்

பொது அறிவு : 

01.வீரமாமுனிவரின் இயற்பெயர் 
என்ன?


கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
Constantine Joseph Beschi

02.முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்?

 கர்னல் ஜான் பென்னிகுவிக்
Colonel John Pennycuick
English words :

skipper -  captain of a ship

disbarred-removed

தமிழ் இலக்கணம்: 

 முக்காற்புள்ளி ( : ): அடுத்து வரும் சொற்கள் அல்லது வாக்கியத்தைக் குறிப்பிடப் பயன்படுகிறது.
முக்காற்புள்ளி (:) பயன்படுத்தப்படும் இடங்கள் 1:
தலைப்பை விரித்து கூறல்: ஒரு தொகைச் சொல்லை (bundle word) அதன் பாகங்களாகப் பிரித்துச் சொல்லும்போது
எ.கா.: முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.

அறிவியல் களஞ்சியம் :

 பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது. இந்நிலையில் விண்வெளியில் பிரதிபலிப்பு கண்ணாடிகளை நிறுவி, இரவு பகுதிகளில் சூரிய ஒளியை திருப்பும் திட்டத்தை அடுத்தாண்டு செயல்படுத்த உள்ளதாக கலிபோர்னியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதிபலிப்பு கண்ணாடியுடன் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது. சூரிய ஒளி குறைந்த பகுதிகளுக்கு இத்திட்டம் பயன்பெறும் என தெரிவித்துள்ளது. ஆனால் இது இயற்கைக்கு எதிரானது என வானியல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 18

ஜெ.ஜெ. தாம்சன்  அவர்களின் பிறந்தநாள்

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.


நா.பார்த்தசாரதி  அவர்களின் பிறந்தநாள்

நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்
நீதிக்கதை

 கவலை பறந்தது



குட்டி யானைக்கு தாகம் எடுத்தது. குளத்தை தேடி சென்றது. கரையில் பசுமையான மரங்கள் பூத்துக்குலுங்கின. ஒரு மரத்தில் கிளி ஒன்று வந்து அமர்ந்தது. அதன் பச்சை நிறமும் சிவந்த வாயும் யானை குட்டியை மிகவும் கவர்ந்தது. என்னை மட்டும் கடவுள் இப்படி கருப்பாக படைத்துவிட்டாரே இந்த கிளி இவ்வளவு அழகாக இருக்கிறதே என்று ஏங்கியது. அப்போது குக்கூ என்ற குரல் கேட்டது. குரல் வந்த திக்கில் குயில் ஒன்று பாடியது. கருப்பாக இருந்தாலும் குயில் இனிமையாக பாடுகிறதே என் குரலும் இருக்கிறதே என ஒரு தடவை பிளிறியது. சில வண்ணத்துப்பூச்சிகள் பூக்களில் தேன் குடிப்பதை கண்டதும் ஐயோ என் தும்பிக்கை இந்த பூவின் மீது பட்டாலே அது உதிருமே பின் எப்படி தேன் குடிப்பது? என வருந்தியது.



தன்னைத் தவிர மற்ற அனைவரும் சந்தோஷமாக இருப்பதை எண்ணி கண்ணீர் விட்டது. குட்டியை காணாத தாய் யானை குளத்திற்கு வந்தது. குட்டியின் நிலை கண்ட தாய் யானை கண்ணே உன் குறையை மட்டும் பார்க்கும் நீ நிறைகளை பார்க்க தவறிவிட்டாய். கடவுள் நமக்கு பலமான தும்பிக்கை வெண்ணிற தந்தம் எல்லாம் தந்திருக்கிறார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூட சொல்வார்கள். இதோ இந்த மரத்தைக்கூட உன்னால் பிடுங்கி எறிந்துவிட முடியும் அனைவருக்கும் நிறை குறை உண்டு. குறைகளை மறந்து நிறைகளை எடுத்து வாழப் பழக வேண்டும் என்றது. தாயின் பேச்சைக் கேட்ட குட்டியானையின் கவலை பறந்தது.

இன்றைய செய்திகள்

18.12.2025

⭐ நிதிபற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், தமிழக அரசு, தனது நிதித் தேவைகளுக்காக மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

⭐சென்னையில் மேலும் 600 முதலமைச்சர் மின்சார பஸ்கள் கொண்டு வர உள்ளதாக மு.க.ஸ்டாலின் தகவல்.
நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

⭐ இந்திய அளவில் 2024 ஆம் ஆண்டில் 4.88 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி டி20 தரவரிசை: முதல் இந்தியராக சாதனை படைத்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்றுள்ளார். டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் ஆவார்.

Today's Headlines

⭐ Due to a financial shortage, the Tamil Nadu government has announced that it will sell bonds worth a total of Rs. 5,000 crore through auction to meet its economic needs.

⭐M.K.Stalin informed that 600 more electric buses will be brought to Chennai. Tamil Nadu is at the top of the targets released by NITI Aayog.

⭐ There were 4.88 lakh road accidents in India in 2024. Out of these, 1.77 lakh people lost their lives. 

 SPORTS NEWS

🏀 ICC T20 Rankings: Tamil Nadu batsman Varun Chakravarthy becomes the first Indian to achieve this feat. He is the 8th-highest-ranked player in the T20 bowlers' rankings.

17 December 2025

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.12.2025

திருக்குறள்: 

குறள் 463 

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

விளக்கவுரை:

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

பழமொழி :
Broken trust is like a cracked mirror. 

உடைந்த நம்பிக்கை , விரிசல் விழுந்த கண்ணாடியைப் போன்றது.

இரண்டொழுக்க பண்புகள் :


1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

கற்பவர்களிடம் கற்றுக் கொள்வதை விட கற்றுக் கொண்டு இருப்பவர்களிடம் கற்றுக் கொள்

      – காரல் மார்க்ஸ்

பொது அறிவு : 

01.மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் எது? 


ஆந்திரப் பிரதேசம் 
Andhra Pradesh

02.சந்திரனின் மறுபக்கத்தை முதலில் புகைப்படம் எடுத்த விண்கலம் எது?

  லூனா 3 -Luna 3
English words :

replenishment-refill

conceited-proud

தமிழ் இலக்கணம்: 

 அரைப்புள்ளி (;) என்பது இரண்டு நெருங்கிய தொடர்புடைய முழுமையான வாக்கியங்களை இணைக்கப் பயன்படும் ஒரு நிறுத்தற்குறி; இது கமா மற்றும் முற்றுப்புள்ளி இரண்டையும் விட சற்று அதிக இடைவெளியைக் குறிக்கும்; 
எ: கா   "புயல் வீசியது; மரங்கள் சாய்ந்தன" (ஒரு கருத்தை மையப்படுத்த); "அவன் சொன்னான்; நாங்கள் கேட்டோம்". 
"மழை பெய்யத் தொடங்கியது; நான் குடை எடுக்க ஓடினேன்."
அறிவியல் களஞ்சியம் :

 இந்தியாவின் கங்கை நதியை போல, கோடிக்கணக்கான ஆண்டுக்கு முன் செவ்வாய் கோளில் பெரிய நதி அமைப்பு இருந்ததாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. செவ்வாய் தரைப்பரப்பில் பள்ளத்தாக்கு, நீரோடை, ஏரி, வண்டல் படிவு உள்ளிட்ட 16 முக்கிய அமைப்புகளை ஆய்வு செய்தனர். இவை ஒரு லட்சம் சதுர கி.மீ., பரப்பளவிலான நீர்நிலைகளை உள்ளடக்கியுள்ளது என கண்டறிந்தனர். இது செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யும் எதிர்கால திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 17

ஓய்வூதியர் நாள்

ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது

நீதிக்கதை

 கடமையே வெற்றி தரும்



ஒரு குரு நாதருக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. சீடர்களை அழைத்து எனக்கு பிறகு நம் ஆசிரமத்தைக் கவனிக்க தகுதியானவர் யாரோ அவரை நியமிக்க உள்ளேன். இன்று முதல் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிப்பேன் சிறந்த ஒருவரை தலைவராக அறிவிப்பேன் என்றார்.



தலைவராகும் ஆசையில் எல்லா சீடர்களும் கடுமையாக உழைத்தனர். குரு நாதரின் தேவையறிந்து நிறைவேற்றினர். ஒரு முடிவுக்கு வந்தவராக குரு நாதர் சீடர்களை ஒன்று கூட்டினார். வயதில் இளைய சீடனைக் காட்டி இவரே நம் மடத்தின் புதிய தலைவர் என அறிவித்தார். மற்றவர்கள் அதிர்ந்தனர்.



குரு நாதரே இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எந்த சாதனையும் இவர் செய்யவில்லையே என்றனர். அது தான் அவரது நற்குணமே நீங்கள் பதவிக்காகத் தான் என்னைக் கவனித்தீர்கள். இவரோ எப்போதும் போல் இயல்பாக இருந்தார். பதவிக்காக அலையும் பண்பு இவரிடம் இல்லை. என்னிடம் தேவையற்ற நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவரது கடமையில் மட்டும் கவனம் செலுத்தியதால் பொறுப்பை ஒப்படைத்தேன். கடமை என்னும் மூன்றெழுத்தே வெற்றி தரும் என்றார் குரு நாதர்.

இன்றைய செய்திகள்

17.12.2025

⭐தமிழ்நாட்டின் 15,000 குழந்தைகள் உட்பட இந்தியா முழுவதும் 9 லட்சம் குழந்தைகள் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

⭐புதுச்சேரியில் மேலும் 75 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு
* எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.  ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

Today's Headlines

⭐9 lakh children across India, including 15,000 children in Tamil Nadu, are affected by type 1 diabetes.

⭐Decision to operate 75 more electric buses in Puducherry. Rs. 8 crore has been allocated for improving the infrastructure for electric buses.

⭐ Australia's Bondi Beach is very famous. Two unknown assailants opened fire indiscriminately.

 🏀 SPORTS NEWS

🏀 The mini-auction of players for the 19th IPL cricket tournament has begun in Abu Dhabi. Only 350 players have been selected in the IPL auction.


16 December 2025

தமிழகத்தில் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகையான பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு டிசம்பா் 10 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையடுத்து பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தோ்வுகள் கடந்த டிச. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தோ்வும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான இரண்டாம் இடைப் பருவத் தோ்வும் திங்கள்கிழமை தொடங்கின. தொடா்ந்து ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான தோ்வுகள் டிச. 23-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளன.

ஜன. 4 வரை விடுமுறை... இதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பா் 24 முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 5-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

முன்னதாக, மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பள்ளிகள் ஜன. 2-ஆம் தேதி திறக்கப்படும் என திங்கள்கிழமை தகவல் பரவிய நிலையில், அந்தத் தகவலை கல்வித் துறை மறுத்துள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வி நாள்காட்டியில் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதுபோல, அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு ஜன. 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.12.2025


திருக்குறள்: 

குறள் 461: 

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
ஊதியமுஞ் சூழ்ந்து செயல் 

விளக்க உரை: 

ஒரு செயலைத் தொடங்குமுன் அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

பழமொழி :
A faithful friend is life's shield. 

நம்பிக்கையான நண்பன் நம் வாழ்க்கையின் கேடயம் ஆகும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

மனநிறைவு கொண்டவர்களுக்கே மகிழ்ச்சி சொந்தமாகும் - அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய வளைகுடா எது?


மெக்சிகோ வளைகுடா 
 Gulf of Mexico

02.மனித இரத்த வகைகளை கண்டுபிடித்தவர்  யார்?

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்
Karl Landsteiner
English words :

bustle-move in an energetic manner

consonance-agreement

தமிழ் இலக்கணம்: 

 உணர்ச்சிக்குறி ( ! ): வியப்பு, ஆச்சரியம், கோபம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறது எ.கா: 1.அடடா! என்ன அழகு!.
2. ஆ! எவ்வளவு உயரம் இந்த மரம்!

அறிவியல் களஞ்சியம் :

 Boat with baking powder

தேவையான பொருட்கள் :
ஒரு பிளாஸ்டிக் குப்பி, உறிஞ்சு குழல் (straw), ஆப்ப சோடா அல்லது சோடா மாவு, சிவப்பு நிற உணவு கலர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர்.

செய்முறை :
குப்பியில் உள்ள மூடியில் சிறு துளை இட்டு அதில் உறிஞ்சு குழலை சொருகவும். குப்பியின் உள்ளே ஆப்ப சோடா போட்டு அதனுடன் சிவப்பு உணவு கலரை சேர்க்கவும்  வினிகரை ஊற்றவும். மூடியை இறுக்க மூடி நீர் நிரம்பிய தொட்டியில் இடவும். தற்போது குப்பி ஒரு ஜெட் படகு போல செல்வதைக் காணலாம்.

அறிவியல் : ஆப்ப சோடா வினிகருடன் வினை புரிந்து CO2 உற்பத்தி செய்யும். இது அதிக விசையுடன் உறிஞ்சு குழல் வழியாக வெளியேறும். இந்த விசை குப்பியை அதி வேகத்தில் அங்கும் இங்கும் இயங்க வைக்கும். சிவப்பு வர்ணம் தொட்டியில் உள்ள நீரில் இருந்து வேறுபடுத்தி அறிய சேர்க்கப் படுகிறது.
டிசம்பர் 16

வெற்றி நாள்

வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.
நீதிக்கதை

 இறக்கை இழந்தாலும் 

ஒரு காட்டில்  ஒரு அழகிய பசும்புல் நிலம் இருந்தது. அந்த நிலத்திலே அநேக வண்ண மலர்கள் பூத்திருந்தன. அவற்றில் ஓரமாக மலர்கள் பூத்துக் குலுங்கும்  மரங்களும் இருந்தன.  அவற்றில் ஒரு பெரிய தேன் கூடு இருந்தது. அதில் வர்தினி என்னும் ராணி தேனீயும் பல வேலைக்கார தேனீக்களும் இருந்தன. அவற்றில் பபுல் எனும் தேனீ மிகவும் சுறு சுறுப்பான தேனீ. அதற்கு தேன் கிடைக்கும் இடங்கள் நன்கு தெரியும். தான் அறிந்த தகவலை மற்றவர்களுடன் எப்பொழுதும் பகிர்ந்து கொள்ளும் எனவே அத் தேன் கூட்டில் அனைவரும் பபுல் தேனீயை விரும்புவார்கள். அக்கூண்டில் இப்பொழுது புதியதாக லாரா என்று சொல்லக்கூடிய ஒரு தேனீ பிறந்தது. அது இந்த பபுல் தேனியை பார்த்து தானும் அதைப்போல சுறுசுறுப்பாகவும் மற்றவர்கள் விரும்பும் வண்ணமாகவும் வாழ வேண்டும் என்று எண்ணியது. அதனால் அது அதிக தூரங்களுக்கு பறந்து சென்று தேன் இருக்கும் மலர்களை கண்டுபிடித்து வந்து சொல்வதுண்டு. அப்பொழுது அங்குள்ள முதிய தேனீக்கள் அதிக தூரம் போகாதே நீ இப்பொழுது சிறியவள். அதிக தூரம் போவது சில வேளைகளிலே  ஆபத்தாக முடியும் என்று அறிவுரை கூறின. ஆனால் ஆர்வம் பகுதியில் லாரா தேனி அனேக இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் செல்லும் பொழுது பலத்த காற்று அடித்து அத்தேனீ கீழே விழுந்து விட்டது. கீழே விழுந்ததினால் அதன் இறக்கைகள் உடைந்து விட்டன இப்பொழுது அதற்கு என்ன செய்ய என்று தெரியவில்லை பிற மிருகங்களால்   தனக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று சொல்லி ஒரு பெரிய இலையின் கீழ் அமர்ந்து கொண்டது.  அங்கே இரண்டு நாள் குளிரில் நடுங்கி கொண்டிருந்தது. யாருக்கும் அது இருக்கும் இடம் தெரியவில்லை. அதிக மனவேதனை அடைந்தது பெரியவர்கள் அறிவுரையைக் கேட்காமல் போனேன் என்று வருந்தியது.  அங்கிருந்தபடியே தன்னை சுற்றி நடப்பதை  கவனிக்க ஆரம்பித்தது. அப்படி கவனிக்கும் பொழுது அது அனேக காரியங்களை கற்றுக் கொண்டது. எந்த நாட்களிலே எந்த மலர்களிலே மதுரம் இருக்கும் எந்த மலர்களில் மகரந்த துகள்கள் அதிகம் இருக்கும். எந்த மலர்களில் பூத்தேன் அதிகம் இருக்கும். காற்று எந்த திசை வீசும் போது நாம் பறக்க கூடாது.  போன்ற காரியங்களை அதிலிருந்து அது கவனித்துக் கொண்டே இருந்தது.  அதனால் அது மலர்களில் இருக்கும் மதுரம் மகரந்த துகள்கள் குறித்து அதிக அறிவடைந்தது. இப்பொழுது அங்கிருந்தபடியே தனது கூட்டில் இருந்து வரும் சிறு தேனீக்களுக்கு புதிய தேனீக்களுக்கு இளம் தேனீக்களுக்கு பபுல் தேனீக்கு கூட அது அறிவுரை சொல்ல ஆரம்பித்தது. இங்கு செல்லுங்கள் அப்படி செல்லுங்கள் இந்த மலரில் ஏறினால் அங்கு சிலந்தி பூச்சி இருக்கும் நம்மை பிடித்து உண்ணும் பூச்சிகள் உண்டு அவைகளில் சிக்கி விடாதீர்கள் என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்தது. இப்பொழுது தேன்கூட்டியலிருந்த எல்லா தேனிகளும் இதனிடமிருந்து ஆலோசனை கேட்ட பிறகு தேன் எடுக்க செல்ல ஆரம்பித்தது அதனால் அந்த கூட்டில் தேன் மிகுதியாக அவைகளுக்கு கிடைத்தது.

நீதி: பெரியோர் ஆலோசனைகள் கேட்க வேண்டும் 

நமக்கு ஒரு பிரச்சனை வந்தாலும் அதையே நினைத்து கலங்காமல் அதையே நமது திறமையாக மாற்ற வேண்டும்

இன்றைய செய்திகள்

16.12.2025

⭐ நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸாக பதிவானதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

⭐தெற்கு ரயில்வேயின் மொத்த பாதை தூரமான 5,116 கிலோ மீட்டரில் 4,995 கிமீ மின் மயமாக்கப் பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

⭐ ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஸ்குவாஷ் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து. இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது.
இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இந்திய அணி பெற்றது.

🏀உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Today's Headlines

⭐ As the severe cold wave has intensified in the Nilgiris district, with temperatures recorded as low as zero degrees Celsius, normal life has been disrupted.

⭐The Southern Railway has announced that 4,995 km of the Southern Railway's total track length of 5,116 km has been electrified.

⭐ US in talks with Russia, Ukraine. Trump unveils 28-point peace plan proposal. 

 SPORTS NEWS

🏀PM Modi congratulates the Indian team for winning the Squash World Cup. India defeated Hong Kong 3-0 to win the title for the first time. The Indian team became the first Asian team to win the trophy.

🏀The World Cup Carrom Championship was held in the Maldives. Keerthana from Kasimedu, Chennai, won the championship title in the Carrom World Cup.


15 December 2025

தமிழகத்தில் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை | வெளியான மிக முக்கிய அறிவிப்பு


 தமிழகத்தில் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான மிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை


தமிழகத்தில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிப்பு/அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான அரையாண்டு தேர்வுகள் வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது

JOIN KALVICHUDAR CHANNEL